திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட ஊராட்சி குழுவின் முதல் கூட்டம் தி.மலை வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகிக்க, மாவட்ட ஊராட்சி செயலர் சரண்யாதேவி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. திருவண்ணாமலை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டன முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகையில்,
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நீங்கள் கட்சி சார்பற்று மாவட்டம் முன்னேற்றத்திற்கு நீங்கள் ஒத்துமையாக செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.யான நாங்களும் உங்களுக்கு ஒத்துழைக்க உள்ளோம். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சில பிரச்சனைகள் இருந்தாலும் தேர்தலில் சிறப்பாக நடந்து உள்ளது. கவுன்சிலர் கட்சி பாராமல் தன்னலமின்றி ஈடுபாடுடன் செயல்பட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டுதோறும் எப்படியும் 4 மாதத்திற்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும். எனவே தண்ணீர் பற்றாகுறையே போக்க தேவையான தீர்மானங்களை நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி அலுவலகமானது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான சொந்த கட்டிடமின்றி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதை, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அருகில் நிலம் ஒதுக்கீடு செய்தும், அதில் சொந்த கட்டிடம் கட்டித்தர அரசின் அனுமதி பெறுதல் மற்றும் நிதி ஒதுக்கீடு கோருதல் குறித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.